ஏ-9 வீதி அருகேயும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகம் ; தடயங்களை கண்டறியாத வகையில் திட்டமிட்டு படுகொலை



 செம்மணி சித்துபாத்தி மயானத்தின் 11*11 சதுர அடி நிலப்பரப்புக்கு மேலதிகமாக A9 வீதியை அண்மித்தும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகிப்பதாக யாழ். சட் டத்தரணிகள் சங்கம் தெரிவித்தது.

இந்த அகழ்வுப் பணிகளை கண்காணிக்க யாழ். சட்டத் தரணிகள் சங்கமும் நேற்று முதல் அகழ்வுப் பணி இடம்பெறும் பகுதிக்கு தனது சட்டத்தரணிகள் குழாமை அனுப்பியுள்ள நிலையில், அதை மேற்பார்வை செய்த யாழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி வீ. மணிவண்ணன் இதனைத் தெரிவித்தார்.

அவசியம் ஏற்படின் மேலதிக நிலப்பரப்பின் அகழ்வு குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணியின் 2ஆம் கட்டத்தின் 9 ஆம் நாள்
அகழ்வுப் பணிகள் நேற்று யாழ். நீதிவான் ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நடந்தன.

இதன்போது, தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உதவியுடன் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்று மாலையாகும் போது மொத்தமாக 42 எலும்புக் கூடுகள் இந்த புதைகுழி பகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அதில் 37 மீட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் இருந்த முறைமையை அவதானிக்கும் போது மிகத் திட்டமிட்டு, சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதையும், தடயங்கள், திசை கண்டறியப்படுவதைத் தடுக்கும் வண்ணமும் திட்டமிடப்பட்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதை அவதானிப்பதாகவும் யாழ். சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி வீ.மணிவண்ணன் குறிப்பிட்டார்.