இது தேர்தலுக்கான வருடம் அல்ல தீர்விற்கான வருடம் - ரணிலின் பதில் இது!


"இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் நாட்டினை மீட்பதற்கான தீர்வினை காண்பதற்கான வருடமாகும், தேர்தலுக்கான வருடம் அல்ல"

இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

மேலும் அவர்,

"தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் தீர்க்கமான சிறந்த முடிவினை விரைவில் எடுக்கும்.

நாட்டின் அரசியல், பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வினைக் காண எதிர்க்கட்சிகளுக்கு நான் பல தடவைகள் அழைப்பு விடுத்தேன், இருப்பினும் அவர்கள் இது தொடர்பில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

இப்போது தங்கள் சுயநலன்களுக்காக தேர்தலை நடத்தக்கோரி காலத்தை இழுத்தடிக்க முனைகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இவ்வருடம் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனத் தெரிந்தும் எதிர்க்கட்சிகள் தேர்தலைக் கேட்டு முரண்படுகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் வலையில் தற்போது தேர்தல் ஆணைக்குழுவும் சிக்கி, வாரம் ஒருமுறை ஒவ்வொரு அறிக்கையை வெளியிட்டு வருகின்றது." இவ்வாறு அதிபர் ரணில் கூறியுள்ளார்.