ரபா நகர் மீது இஸ்ரேல் சரமாரியாக வான் தாக்குதல் : வீடுகள் தரைமட்டம்

 தரைவழி தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் சரமாரியாக வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தின் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.  

இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் சூழலில், போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக அமெரிக்க தூதுக் குழு ஒன்று நேற்று (22) இஸ்ரேலை சென்றடைந்தது.

மறுபுறம் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் புதிய உடன்படிக்கை ஒன்றில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் போர் அமைச்சரவை உறுப்பினரான பென்னி கான்ட்ஸ் ஜெரூசலத்தில் வைத்து தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் தாக்குதல் காரணமாக அங்கு ஏற்பட்டிருக்கும் பெரும் உயிரிழப்புகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்று அங்கு கூடாரங்களில் மக்கள் நிரம்பி வழிந்து வருகின்ற சூழல் கவலையை அதிகரித்துள்ளது.

இந்த நகர் காசாவில் இஸ்ரேலிய தரைப்படை புகாத ஒரே நகராக இருப்பதோடு எகிப்து வழியாக காசாவுக்கு உதவிகள் வரும் வாயிலாகவும் காணப்படுகிறது.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள புனித ரமழான் மாதத்திற்கு முன்னர் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் ரபா நகர் மீது தரைவழி படை நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

எனினும் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் குறித்து ரபா குடியிருப்பாளர்கள் நேற்று குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கப்பட்டனர். அந்த நகரின் கடற்கரைப் பகுதிகள் கூட இஸ்ரேலிய கடற்படை படகுகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகின.

ரபாவில் உள்ள அல் நூர் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதல் ஒன்றை அடுத்து அங்கு பதிவு செய்யப்பட்ட வீடியோவை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் வெளியிட்டுள்ளார். தாக்குதலில் அந்த வீடு தரைமட்டமாக்கப்பட்டிருப்பதும், கொல்லப்பட்டவர்கள் வெள்ளை அல்லது கறுப்பு போர்வைகளால் போர்த்தப்பட்டிருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அல் நூர் குடும்பத்தைச் சேர்ந்த தனது மனைவி நூர், தனது ஒரு வயது மகள் மற்றும் மனைவியின் பெற்றோர்கள், சகோதரர் மற்றும் மற்ற உறவினர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அப்துல்ரஹ்மான் ஜூமா குறிப்பிட்டார்.

இரத்தம் தோய்ந்த வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட தனது மகளின் உடலை சுமந்த வண்ணம் இருந்த ஜூமா, “எனது மடியில் இருக்கும் இவள் எனது ஆன்மாவை எடுத்துச் சென்றுவிட்டாள். இவளுக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது” என்று குறிப்பிட்டார்.

மறுபுறம் கான் யூனிஸ் நகரில் இருந்து மேற்காக மவாசிக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதாக உள்ளூர் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னர் இந்தப் பகுதி பாதுகாப்பான இடம் என்றும் மக்களுக்கு அடைக்கலம் பெறும்படியும் இஸ்ரேல் அறிவுறுத்தி இருந்தது.

டாங்கிகள் கடற்கரை வீதியை அடைந்த நிலையில் அது காசாவின் மற்ற பகுதிகளில் இருந்து கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களை துண்டிப்பதாக இருந்தது. எனினும் அந்த டாங்கிகள் சில மணி நேரங்களில் அந்தப் பகுதியில் இருந்து வாபஸ் பெற்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

காசாவின் தென் பகுதியில் பல வீடுகள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 20 பேர் வரை கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

மத்திய காசாவில் காதிபான் குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களாவர்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் 90க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று கூறியது. இதன்படி அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 29,410 ஆக உயர்ந்திருப்பதோடு மேலும் 69,465 பேர் காயமடைந்துள்ளனர்.