ஹமாஸ் தலைவரின் 3 மகன்களை கொலை செய்த இஸ்ரேல் : காஸாவில் பரபரப்பு


காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 புதன்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில், பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவும் ஹனியேவின் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர். ஹனியேவின் மூன்று மகன்கள் பயணித்த கார் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

 
குறித்த தாக்குதலில் ஹனியேவின் இரண்டு பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டதாகவும் மூன்றாவது குழந்தை காயங்களுடன் தப்பியதாகவும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊடகங்களை எதிர்கொண்ட இஸ்மாயில் ஹனியா, எங்கள் கோரிக்கைகள் உறுதியானது, அதில் நாங்கள் எந்த சலுகையும் அளிக்க விரும்பவில்லை என்றும், எங்கள் மக்களின் உரிமையை விட எனது மகன்களின் உயிர்ப்பலி ஒன்றும் பெரிதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இஸ்மாயில் ஹனியாவின் குடும்ப வீடும் அழிக்கப்பட்டது. காஸா மீதான இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழித் தாக்குதலின் ஏழாவது மாதத்தில், இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஹமாஸ் விரும்புகிறது.

 அத்துடன் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தாயகம் திரும்ப அனுமதியும் கோரியுள்ளது. இதனிடையே, ஹனியேவின் மூத்த மகன் தனது மூன்று சகோதரர்கள் கொல்லப்பட்டதை பேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.


2017ல் ஹமாஸ் படைகளின் முதன்மை பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேலின் பயணக் கட்டுப்பாடுகளில் இருந்து தப்ப, ஹனியே துருக்கிக்கும் கட்டார் தலைநகர் தோஹாவுக்கும் இடையே இடம்பெயர்ந்துள்ளார்.

மட்டுமின்றி, சமீபத்திய போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளவும் அல்லது ஹமாஸின் முக்கிய கூட்டாளியான ஈரானுடன் தொடர்பு கொள்ளவும் இது அவருக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.