இரவோடு இரவாக அதிமுக்கிய இடங்கள் மீது மாறி மாறி குண்டுகளை பொழிந்த இஸ்ரேல், ஈரான்



60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்களை பயன்படுத்தி, இரவுக்குள் ஈரானின் தெஹ்ரானில் உள்ள பல இடங்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

சுமார் 120 வெடிகுண்டுகள் இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இவை ஈரானின் இராணுவ ஏவுகணை உற்பத்தி மையங்களையும், ஈரானின் அணுஆய்வு மையத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலின் இராணுவம் கூறியுள்ளது.

இரவு நேரத்தில், ஈரானும் இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இதில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் சில தாக்குதல்கள் பதிவானதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஈரான் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

இதேநேரம் இஸ்ரேலின் பீர் ஷெவா நகரின் தெற்கு பகுதியில் உள்ள மைக்ரோசொஃப்ட்  உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

அதே பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தீயணைப்புத் துறையும் மருத்துவ குழுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சேவையாற்றி வருகின்றனர்.

ஆறு பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலின் அவசர சேவை அமைப்பான மேகன் டேவிட் எடோம் தெரிவித்துள்ளது.