ஈரானுக்கு எதிரான பதிலடி தாக்குதலை கைவிடுகிறது இஸ்ரேல்


ஈரான் தொடுத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி உண்டு என கூறி வந்த இஸ்ரேல், தற்போது அதை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டதற்கு பரிசாக காஸா பகுதியில் ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 
இதனால் ஹமாஸ் படைகளின் கடைசி வலுவான பகுதியாக அறியப்படும் ரஃபா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுக்க இருக்கிறது என்றே அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேல் நேசநாடுகளும் இதற்கு மௌன அனுமதி அளித்துள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.
ரஃபா மீதான இஸ்ரேலின் நடவடிக்கை அதிக மனித இழப்புகளை ஏற்படுத்தும் என்று மேற்கத்திய நாடுகள் அச்சம் தெரிவித்தாலும்,

ஈரான் மீது இஸ்ரேலின் பதிலடியானது மூன்றாம் உலகப்போருக்கு காரணமாக அமையலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நம்புவதாக கூறப்படுகிறது.
ஆனால் ஹமாஸ் மீது நடவடிக்கை முன்னெடுப்பது, இஸ்ரேலை பிராந்திய போருக்கு தள்ளும் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கனவுக்கு பதிலடியாக அமையும் என்றே அமெரிக்கா கருதுகிறது. அக்டோபர் தாக்குதலை திட்டமிட்டு, தற்போதைய நெருக்கடிக்கு காரணமானவர் யாஹ்யா சின்வார்.

 ரஃபா பகுதியில் குடியிருக்கும் 1.4 மில்லியன் மக்களுடன் யாஹ்யா சின்வார் மற்றும் அவரது முதன்மை தளபதிகள் பலர் அங்கே ஒளிந்திருப்பதாகவே இஸ்ரேல் நம்புகிறது.
 
இஸ்ரேலுக்கு வெளியே இந்த நெருக்கடி வியாபிக்க கூடாது என்றே அமெரிக்கா விரும்புவதாக இஸ்ரேல் அரசாங்கத்திற்கான முன்னாள் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போதைய சூழலில் ஹமாஸ் படைகளை மொத்தமாக ஒழித்த பின்னர், ஈரான் கணக்கை முடிப்பதே புத்திசாலித்தனம் என இஸ்ரேலுக்கு தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 ஹமாஸ் படைகளை மொத்தமாக அழித்து, எஞ்சிய 100 பணயக் கைதிகளை மீட்க வேண்டிய கட்டாயம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


ஆனால் இஸ்ரேல் தரப்பில் சிறு நடவடிக்கை முன்னெடுத்தாலும், 10 மடங்கு பலத்துடன் தாக்குவோம் என்ற அச்சுறுத்தலும் பதிலடி என்ற முடிவை கைவிட இஸ்ரேலை தூண்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதரவு இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.