பாப்பரசரின் இரங்கல் பதிவை அதிரடியாக நீக்கிய இஸ்ரேல், இரங்கல் தெரிவிக்காத பெஞ்சமின் : அதிர்ச்சியில் உலக நாடுகள்



பாப்பரசர் பிரான்சிஸின்மறைவிற்கு இரங்கல் பதிவை வெளியிட்டிருந்த இஸ்ரேல், அந்த பதிவை நீக்கி தனது வன்மத்தை வெளியிட்டுள்ளது.

பாப்பரசரின் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பல நாடுகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இஸ்ரேலின் வெளியுறவுத் துறை, பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், பாப்பரசர் பிரான்சிஸின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசிர்வாதமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அந்தப் பதிவானது தற்போது நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு கத்தோலிக்க நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், தூதர்கள் மற்றும் இணையவாசிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


 முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலையும், அங்கிருந்த கத்தோலிக்க தேவாலயம் தகர்க்கப்பட்டதற்கும் பாப்பரசர் பிரான்சிஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ஹமாஸ் படையின் கட்டுப்பாட்டிலுள்ள பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் தங்களது இரங்கலைப் பதிவு செய்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை இரங்கலை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.