உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில், உக்ரேனில் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய தாக்குதல் 2 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து வரும் நிலையில், விளாடிமிர் புடின் 5வது முறையாக ஜனாதிபதியாகியுள்ளார்.
இந்த நிலையில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய திட்டம் தீட்டியதில் பங்குபெற்றதாக, உக்ரைன் அரசின் பாதுகாப்பு பிரிவில் அங்கம் வகிக்கும் குறித்த 2 அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக உக்ரைனுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் பயங்கரவாதத்திற்கு தயாரான குற்றச்சாட்டு உள்ள நிலையில், இருவர் மீதும் தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் விளாடிமிர் புடின் பதவியேற்பின்போது, அவருக்கு பரிசாக ஜெலென்ஸ்கியை கொலை செய்ய ரஷ்யா திட்டமிட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.