வடக்கு கிழக்கில் அராஜகங்களைப் புரிந்துகொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவோம் என அழைப்பது சரியா!


வடக்கு கிழக்கில் அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சினைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் ஒரு பிரமாண்டமான புத்த விகாரை இராணுவத்தினுடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது.

அந்த இடம் பொதுமக்களுக்கு சொந்தமான நிலம். நீதிமன்ற கட்டளையை மீறி இப்படியான சம்பவங்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு வடக்கு கிழக்கிலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்னணியிலே தான், வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை, கிண்ணியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய பகுதி அதனைவிட மட்டக்களப்பிலே மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவை என பல்வேறு அத்துமீறல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த அரசாங்கம் மற்றும் அரச திணைக்களங்கள் குறிப்பாக தொல்லியல் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, பௌத்த சாசன அமைச்சு, மகாவலி அபிவிருத்தி திணைக்களம், வனவள ஜீவராசிகள் திணைக்களம் இப்படியாக பல திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் கட்டுமீறி தமிழ் மக்களினுடைய பூர்வீக நிலங்களில் சட்டவிரோதமாக பௌத்த விகாரைகளை தொடர்ந்து அமைத்து வருகின்றது.

தற்போது வரையும் அரச படைகளும் அரசும் இதனை தொடர்ந்து வண்ணமே உள்ளன. இந்த லட்சணத்திலே இந்தநாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க அண்மையிலே வவுனியாவில் தமிழ் கட்சிகளுடன் பேசி இனப்பிரச்சினைகளை தீர்ப்போம் என்ற ஒரு இணக்கப்பாட்டினை எட்டியிருந்தார்.

அதனைவிட இந்த ஆண்டு முற்பகுதியிலே நாடாளுமன்ற சர்வகட்சி கூட்டத்தினையும் கூட்டி பல விடயங்கள் எட்டப்பட்டிருந்தாலும் அவற்றில் எவையுமே முறைப்படுத்த முடியாத நிலையில் மீண்டும் மேதினத்தன்று ஒரு அறைகூவலை விடுத்திருக்கிறார்.

தமிழ் கட்சிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் நாடாளுமன்றத்திலே அரசாங்கத்தில் அங்கம் வகித்து பிரச்சினைகளை தீர்ப்போம் என்று கூறியிருக்கின்றார்.

இந்த சூழ்நிலையிலே நாங்கள் ரணிலுக்கு தமிழ் மக்கள் சார்பிலே சொல்லக்கூடியது ஒன்றே ஒன்று தான், நீங்கள் நிறைவேற்று அதிகார அதிபராக  இருக்கின்றீர்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பௌத்தமயமாக்கல் சிங்கள குடியேற்றங்கள் என்பவற்றை உடனடியாக உங்களால் தடுத்து நிறுத்த முடியும்.

உங்களின் கீழே தான் இந்த அனைத்து அமைச்சுக்களும் திணைக்களங்களும் இயங்கி வருகின்றன. எனவே இந்த அதிகாரிகளும் இராணுவமும் கடற்படையும் புலனாய்வாளர்களும் காவல்துறையினரும் சட்டத்தை மீறி நீதிமன்ற கட்டளைகளை மீறி மதிக்காமல் பல்வேறு அடாவடித்தனங்களை செய்துவருகின்ற நிலையில் நீங்கள் எந்தவொரு நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் தமிழ்மக்கள் மீது காட்டாது ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக வந்த பின்பு எங்கள் மீது இருக்கக்கூடிய கோரிக்கை நியாயமானது.

நீண்டகாலமாக இருக்கூடிய தமிழ் அரசியல் கைதிகளை நீங்கள் நினைத்தால் பொதுமன்னிப்பு அளித்து நாளையே விடுதலை செய்யலாம் அதனைவிட காணமல் போனோருடைய பிரச்சினைக்கு என்ன தீர்வு என்னநடந்தது என்ற தீர்வை உங்களால் சொல்லமுடியும்.

நடைபெறுகின்ற அட்டூழியங்களை ஒரு முறைமையின் அடிப்படையில் பாதுகாப்பு நீதியமைச்சர் என்றரீ தியில் வெளிப்படுத்தமுடியும் எங்களுக்கு எந்த சமிஞ்ஞையும் வெளிப்படுத்தாது வெறுமனே எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து எங்களை அழித்து கொண்டு எங்கள் கலாசாரத்தை எங்கள் இருப்புக்களை இல்லாமல் செய்து கொண்டு மறுபுறமே இவ்வாறான கோரிக்கைகளை விடுகின்றீர்கள்.

நீங்கள் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கும் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி கடனைபெற ஐ.நாவை திருப்பதிபடுத்தவும் நீங்களா போடும் நாடகம்தான் இந்த அறைகூவல் எனவே இவற்றை ஏற்றுகொள்ளமுடியாது.

70வருடமாக இந்த நாட்டிலே புரையோடிபோயிருக்கின்ற இனப்பிரச்சினை அதாவது ஏற்கனவே குறிப்பிட்டிருந்தீர்கள் சுதந்திர தினத்திற்கு முன்னர் பிரச்சினையை தீர்ப்போம் என்றும் பின்னர் சர்வகட்சியினரை வவுனியாவில் அழைத்து கலந்துரையாடினீர்கள்.

இது உலக நாடகம் இன்று இடம்பெற்றுகொண்டிருக்கக்கூடிய அராஜக செயல்களை பார்க்கின்ற பொழுது ஒருபக்கம் எங்களை அழித்து கொண்டு மறுபக்கம் நல்லிணக்கம் சமிக்ஞை காட்டுவது போல் நாடகம் ஆடுகின்றீர்கள். எனவே தமிழ் கட்சிகள் எவையாக இருந்தாலும் நாடாளுமன்றிலே அரசாங்கத்துடன் சேரமுடியாது.

அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞையாக அரசியல் கைதிகளை விடுதலை செய்து தையிட்டி போன்ற அபகரிப்புக்களை உடனடியாக நிறுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும். ஐ.நா தீர்மானத்தினை காட்டி நல்லெண்ணத்திற்கு அழைக்க வேண்டும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நாட்டினுடைய கூட்டாட்சி மூலம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணமான அம்பாறை மாவட்ட மக்களது அடிப்படை பிரச்சினைகள், அதேபோல திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட மக்களினுடைய பிரச்சினைகளும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக  பிரதேச செயலகத் தலைமை தேர்தல் பிரச்சினை பிரதானமானதாக காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் தொடர்கின்ற அடக்கம் முறை முதலில் ஒழிக்கப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.