பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க நினைத்த சிலர், பல நூறு மாணவிகளுக்கு விசம் கொடுத்த சம்பவம் ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு சில மர்ம நபர்கள் பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக எல்லை மீறிய சில மோசமான காரியங்களை அவர்கள் செய்துள்ளனர்.
பெண்கள் கல்வி கற்பதை நிறுத்த, ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே அமைந்துள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான புனித நகரமான கோமில் பாடசாலைக்குச் செல்லும் சிறுமிகளுக்கு, சிலர் விசம் கொடுக்கும் அளவுக்குச் சென்றுள்ளதாக ஈரான் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே பாடசாலையைச் சேர்ந்த 18 மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து கோம் நகரை சுற்றியுள்ள 10 பெண்கள் பாடசாலைகளில் இதேபோல் பல மாணவிகள் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் ஈரானின் மேற்கு லோரெஸ்தான் மாகாணத்தின் போருஜெர்ட் நகரில் உள்ள பாடசாலைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 200 மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய ஈரான் சுகாதாரத் துறை துணை மந்திரி யூனுஸ், மாணவிகளுக்கு வேண்டுமென்றே விசம் கொடுக்கப்பட்டதாலேயே அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், பெண்கள் படிக்கும் பாடசாலைகளை மூட வேண்டும் என்ற நோக்கில் சிலர் இதை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இது ஈரான் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விரிவாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென போராட்ட குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் தலைநகர் டெஹ்ரானில் இருக்கும் பார்டிஸ் நகரில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலையில், நேற்று முன்தினம் மாணவிகள் 37 பேருக்கு விசம் கொடுக்கப்பட்டது.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இவ்வாறு மாணவிகளுக்கு விசம் கொடுக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி இருப்பது மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.