யாழின் பெண்கள் பாடசாலைகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை - உடன் நடைமுறையாகும் செயற்திட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத், பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான உத்தரவு நேற்றைய தினம் (22.06.2023) வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி யாழில் உள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மாணவிகளின் பெற்றோரின் தொலைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என மஞ்சுள செனரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள் குறித்த வட்ஸ்அப் குழுக்களில் பதிவிடப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வட்ஸ்அப் குழுக்களை, மாணவிகளின் வரவு உட்பட அவர்கள் தொடர்பான ஆசிரியர்களின் அவதானிப்புக்களை மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர் பார்க்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும், இந்த குழுக்கள் வகுப்பு ஆசிரியைகளாலேயே கையாளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளிக்காவிட்டால் உடனடியாக இந்த குழுக்கள் ஊடாக பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், மாணவிகள் பாடசாலைக்கு வரும் வாகன விவரங்கள், சாரதிகளின் தொலைபேசி இலக்கங்கள் போன்றவையும் இந்த குழுக்களில் பகிரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும், குறித்த செயற்திட்டம் அந்தந்த பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.