இந்தியாவுடனான மோதல்! மாலைதீவிற்கு 20 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா

இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையில் விரிசல் அதிகரித்து வருகின்ற நிலையில், மாலைதீவு அதிபர் சீனாவுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள விடயம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சீனாவுக்கு 5 நாள் விஜயம் மேற்கொண்ட மாலைதீவு அதிபர் முகமது மூயிஸ் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதில் சீனா - மாலைதீவு இடையே சுற்றுலா, பேரிடர் மேலாண்மை, கடல்சார் பொருளாதாரம், வர்த்தக வழித்தடம் உள்பட பல்வேறு துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இது தொடர்பாக மாலைதீவு அதிபர் அலுவலகம் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மாலைதீவு அரசுக்கும், சீன அரசுக்கும் இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இப்போது இரு நாட்டு அதிபர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று தெரிவித்துள்ளது. மாலைதீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார்.

அவர் பதவி ஏற்றதும் மாலைதீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு சென்றதை மாலைதீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்தனர்.

மாலைதீவு சுற்றுலா செல்வதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். தற்போது பிரதமர் மோடியை விமர்சித்ததால் மாலைதீவு பயணத்தை இந்தியர்கள் பலர் ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.