இஸ்ரேலுக்கு இரகசியமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த இந்தியா : பரபரப்பு தகவல் வெளியானது


காஸாவில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயின் கடற்கரையில் நிறுத்தப்பட்ட ஒரு சரக்குக் கப்பலில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு (ஐனுகு) 30 தொன்களுக்கும் அதிகமான ரொக்கெட்டுகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததை முதன்மையான செய்தி ஊடகமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.


இந்தக் கப்பல் தென்கிழக்கு இந்தியாவிலிருந்து புறப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் (18 மைல்) தொலைவில் உள்ள அஷ்டோத் துறைமுகத்திற்கு பயணித்துள்ளது.
செங்கடலில் தொடர்ச்சியான ஹவுதி தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக இந்த கப்பல் ஆபிரிக்காவைச் சுற்றி பயணித்துள்ளது.
அதேவேளை பலஸ்தீன கொடிகளை ஏந்தி துறைமுகத்தில் திரண்ட மக்கள், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் கப்பலை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இடதுசாரி உறுப்பினர்கள் சிலர் ஸ்பெயின் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தொடர்புடைய கப்பலானது ஸ்பெயின் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கக் கூடாது என்றும் கோரியிருந்தனர்.

 இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றப்பட்ட கப்பலை அனுமதிப்பது என்பது பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்காக தற்போது விசாரணையில் உள்ள ஒரு நாட்டிற்கு ஆயுதங்களை கொண்டு செல்வதை அனுமதிப்பதாகும் என அந்த 9 உறுப்பினர்களும் குறிப்பிட்டிருந்தனர்.

 
இதனிடையே அந்த கப்பல் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. தற்போது வெளியான தரவுகளின் அடிப்படையில், அந்த கப்பலில் இந்தியா அனுப்பிய ஆயுதங்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2ம் திகதி சென்னையில் இருந்து தொடர்புடைய கப்பலானது இஸ்ரேல் நோக்கி புறப்பட்டுள்ளது. அதில், 20 தொன் ரொக்கெட் என்ஜின்கள், வெடிக்கும் தன்மை கொண்ட 12.5 தொன் ரொக்கெட், 1,500 கிலோ வெடிப் பொருட்கள், 740 கிலோ பீரங்கிகளுக்கான வெடிப் பொருட்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன.