கடுமையான விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார்

புதிய இணைப்பு

இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  நீண்ட நேர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முதலாம் இணைப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்களென  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவர்கள் சார்பில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இதன்படி இன்று(03) முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி பயணித்த இவர்கள் மூவரும் தற்போது 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.

அதேவேளை இலங்கை தமிழர்களான முருகன், ரொபர்ட் பயஸ், எஸ்.ஜெயக்குமார் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்டு கடந்த மாதம் உயிரிழந்ததையடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.