யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்த இந்திய கப்பல் - திறந்து வைக்கப்பட்ட கே.கே.எஸ் துறைமுகம்


சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்று(16) காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது.

சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றார்.

சென்னை - யாழ்ப்பாணம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியாக நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

இதன்போது 25 கோடி ரூபா பெறுமதியில் அமைக்கப்பெற்ற காங்கேசன்துறை காங்கேசன்துறை துறைமுக முனையத்தையும் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், கப்பற்துறை அமைச்சின் செயலர், துறைமுகங்கள் அதிகாரசபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி, யாழ். அரசாங்க அதிபர், மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.