யாழில். அதீத வெப்பத்தால் ஐவர் உயிரிழப்பு : ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் என எச்சரிக்கை


தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நேற்று யாழ். போதான வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,


இந்த ஹீட் ஸ்ட்ரோக் மூலம் எமது விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளை இழந்து இருக்கின்றோம்.

இனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பது நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும்.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைகளின் அதிகரிப்பு மற்றும் அதிகளவிலான மரங்கள் அழிப்பு என்பனவற்றின் மூலம் தான் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.

எனவே மக்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு மரங்களை நட்டு சுற்றாடலை குளிர்மையாக வைத்திருக்கவேண்டும்.

குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். கடந்த இரு வாரங்களில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக எமது நோயாளர் விடுதிகளில் அனுமதிப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து நோயாளிகளை இழந்து இருக்கின்றோம்.

இந்த நோய் வராமல் இருப்பதற்கு வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீர் ஆகாரங்களை வழங்கவேண்டும்.

தர்பூசணி, வெள்ளரிப்பழம், தோடம்பழம் போன்ற பழங்களை கூடுதலாக உண்ணக் கொடுக்க வேண்டும்.

வயது போனவர்களுக்கு தண்ணி தாகம் எடுப்பது தெரியாது, எனவே நீர் ஆகாரங்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் வெப்பத்தை குறைத்து ஹீட் ஸ்ட்ரோக் வாராமல் தடுக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அதிகரித்த வெப்பநிலை காரணமாக யாழில் தற்போது வெள்ளரிப்பழ விற்பனை சூடுபிடித்துள்ளது
 வெள்ளரிப் பழமொன்றின் விலை  தற்போது 300 முதல் 450 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும்,

அதனை தவிர்க்க நீர் உள்ளிட்ட இயற்கை பானங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.