வழிபாட்டு தலங்கள், விருந்தகங்களுக்கான மின்கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..! உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..!

சமய வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தினாலும், பொதுவான கட்டணம் 23 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

91 முதல் 180 வரையான அலகுகளுக்கு 24 சதவீதமும், 180க்கு மேற்பட்ட அலகுகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன.

அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் உணவுப்பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நேற்று முன்தினம் அந்த சங்கம் தீர்மானித்திருந்தது.

இதேவேளை, உணவுப்பொருட்களின் விலையினை இந்த வாரத்தில் மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்தார்.