மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு! நெருக்கடியில் முகமது முய்சு

மாலைதீவில் தொடரும் பதற்றமான சூழ்நிலையில் மாலைதீவு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்து மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் புதிய அதிபராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைதீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிற நிலையில், அந்நாட்டு அதிபராக சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட முகமது முய்சு செயற்பட்டு வருகிறார்.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிற நிலையில் சீனாவிற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டையும் அழுத்தமாக வெளிப்படுத்தி வருகிறார்.   

இந்நிலையில்,  நேற்று முன்தினம் (28) மாலைதீவு நாடாளுமன்றில் அதிபர் முய்சு தலைமையிலான அரசில் புதிதாக நியமிக்கபட்டுள்ள 4 அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது ஆளும்கட்சிக்கும் இந்திய சார்பு நிலைப்பாட்டை கொண்ட எதிர்க்கட்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறிய நிலையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

 மீண்டும் நேற்று (29) நாடாளுமன்றம் கூடிய நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.  

இந்த வாதப்போக்கின் இறுதியில் அமைச்சரவையில் 1 அமைச்சரை மட்டும் சேர்க்க எதிர்க்கட்சி ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து மாலைதீவு அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரை பதவிநீக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இவ்வாறான சூழலில் நாடாளுமன்றத்தில் அதிபருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் பட்சத்தில் முய்சு, அதிபர் பதவில் இருந்து நீக்கப்பட்டு புதிய அதிபராக எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் மீண்டும் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இந்திய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தற்போதைய மாலைதீவின் எதிர்க்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாலைத்தீவு மற்றும் இந்தியாவிற்கிடையிலான உறவு மீண்டும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.