இரவோடு இரவாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் - காவல்துறையினரை கண்டதும் தப்பியோடிய கும்பல்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்துள்ளனர்.

இதேவேளை நேற்று (31) இரவு, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அந்த பகுதிக்குச் சென்ற நிலையில் ,குறித்த நபர்கள் இயந்திரங்களை கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள அரச காணியை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் 541 வது படைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் அப்பகுதிக்குச் சென்றனர்.

இதன் போது ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்து கொண்டிருந்த நபர்கள் இராணுவம் மற்றும் காவல்துறையினரை கண்ட நிலையில் ஜே.சி.பி இயந்திரங்களை அங்கேயே கை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் காணியை துப்பரவு செய்ய பயன்படுத்திய 3 ஜே.சி.பி இயந்திரங்களை மீட்ட இலுப்பைக்கடவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.