இனியும் எம்மை ஏமாற்ற நினைத்தால் சர்வதேச சமூகத்தை நேரடியாக பங்கெடுக்கச் செய்வோம்!

 

சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டையீனமாகச் செயற்பட்டால் தமிழ் மக்களின் நலன் கருதி நாங்கள் தீர்க்கமான முடிவை எடுப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் காட்டாமகத் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய அரசமைப்பு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகத் தமிழருக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியின் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அனைவருக்கும் எனது அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி தமிழ் மக்களுக்கு முக்கிய பண்டிகை நாள்.

“புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம்.

தமிழர்களின் வாழ்வில் அமைதி ஏற்பட்டு மக்கள் முன்னேற்றகரமாக வாழக்கூடிய வகையில் இலங்கையில் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் இன்றைய நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

வழமை போல் சிறிலங்கா அரசு, இந்தக் கருமத்தைச் செய்யாமல் இழுத்தடிக்க முடியாது. கடந்த காலக் கசப்பான சம்பவங்களால் நாங்கள் விரக்தி நிலையில் இருக்கின்றோம்.

சர்வதேச சமூகத்தை இந்தக் கருமத்தில் நேரடியாகப் பங்கெடுக்கச் செய்து தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிவகுக்குமாறு நாங்கள் கோருவோம்.

சிறிலங்காவின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது” எனவும் தெரிவித்தள்ளார்.