ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம்..! அமைச்சர் மனுஷ

ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் எழுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் மட்டத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையினை கொண்டு வந்துள்ள சேனல் 4 காணொளி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதிலைக்கையில்,

சேனல் 4 அலைவரிசையின் காணொளி தொடர்பில் நாம் அரசு என்ற ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். 

நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

இது தொடர்பில் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு எதிர்வரும் நாட்களில் அறியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். 

அது தவிர சர்வதேச ரீதியாக இது தொடர்பில் தேவைகள் இருப்பின் அது குறித்தும் கவனம் செலுத்த அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக உள்ளோம். 

இது தொடர்பிலும் அமைச்சரவையில் கலந்துரையாடினோம். அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயத்தில் பின்வாங்க மாட்டோம்.

எனக்கு தனிப்பட்ட முறையில் அமைச்சர் என்ற வகையில் அன்றி பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் எதிர்கட்சியில் இருந்து நான் கேள்விகளை தொடுத்தவன் என்ற முறையிலும் புலனாவது என்ன வென்றால், இவ்வாறான காரணங்கள் எழுவது ஜெனீவா மனித உரிமைகள் குழு கூடும் கால கட்டத்தில் இவ்வாறான காணொளிகள் சேனல் 4 அலைவரிசையில் இருந்து தொடர்ந்தும் வருகின்றது தான். இந்த காலகட்டத்தினை பாருங்கள்.

இந்த காணொளியில் உள்ள கருத்துக்கள் தொடர்பில் கட்டாயமாக ஆராய வேண்டும். அதில் கூறியது போல் குறித்த திகதியில் குறித்த நேரத்தில் அவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதா இல்லையா என்பது முக்கியம். அது குறித்து எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. 

ஆனால், இதில் கூறியது போல் திட்டமிட்டபடி இது நடந்தது என்றால், அவ்வாறு தான் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் களமிறங்க திட்டம் தீட்டியமை குறித்து சுரேஷ் சாலே அவ்வாறு தெரிவித்திருந்தார், அந்த மௌலவி கூறும் சாட்சியம் தொடர்பில் எனக்கு தெரியவில்லை மௌலவியா இல்லையா என்று குறித்த நபரின் சாட்சியத்தின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், நான் இவ்வாறு கூறுவதில் வருத்தமடைகிறேன்.

குறித்த சம்பவத்தின் பின்னர் கார்த்தினால் அவர்கள் காலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களிக்க சென்றிருந்தது, கன்னத்தில் கையினை வைத்து அழுதழுது அனுதாபத்தினை சேர்த்தது இவை அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தின் பங்குதாரர் என்ற முறையில் தான் என்று கூற வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து. என்றார்.