யாழில் இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட பகுதி

யாழ்.(Jaffna) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (13.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்ட வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் கூடமாக செயற்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதுடன் வீடானது சீல் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவழைத்து பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.