காதலர் தின பரிசாக திருட்டு நகையை மனைவிக்கு பரிசளித்த கணவன் கைது...! யாழில் சம்பவம்...!

காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் உள்ள வீட்டினுள் 29 பவுண் நகைகள் திருடப்பட்டது. 

திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,  யாழ்ப்பாண நகரில் நேற்று 4 பவுண் நகைகளை அடகு வைக்க சென்றபோது பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பிரதான சந்தேக நபர் 25 பவுண் தாலியுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.