மண்டைதீவுப் பகுதியில் இளைஞர், யுவதிகள், சிறுவர், குழந்தைகள், படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இவ்வாறான சம்பவம் நடந்தது தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் வேண்டும்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. நம்பத் தகுந்த சாட்சியங்களுடன் பொலிஸில் முறைப்பாடளியுங்கள். அப்போதுதான் நீதிமன்றம் கட்டளையிடும். அதனையடுத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
நீதிமன்றம் உத்தரவிடாமல் எதனையும் செய்ய முடியாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சிறிதரன் முன்வைத்த மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத் தீவு குமுழமுனை, கொக்குத்தொடுவாய், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான கேள்விகளுக்கு பதிலளிக்கையில் நீதியமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும், யுத்த குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில் பொறுப்பு கூறப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய அவர், அந்தவிடயத்தில் கடந்த அரசாங்கங்களை போலவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.