மீண்டும் ஹவுதியின் பதிலடியை முறியடித்த அமெரிக்கா! செங்கடலில் தொடரும் பதற்றம்

செங்கடல் பகுதியில் ஹவுதி படையினர் நடத்திய தாக்குதல்களை வெற்றிகரமாகமுறியடித்து அவர்களின் தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (09) தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தைக் குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதலையே அமெரிக்க கடற்படையினர் முறியடித்தனர்.

அதன்படி, ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்குத்தல்களை நடத்தியிருந்தனர், அதில் 18 ஒரு வழி டிரோன்ககள், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகள் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை என்பன அடங்குகின்றன.

ஹவுதி படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அதிஷ்டவசமாக எந்தவிதமான உயிர்ச்சேதமோ, கப்பல்கள் மற்றும் பொருட்செதமோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படைஇடம் உள்ள "டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்து வருகிறது.

இதில் ஏமன் (Yemen) நாட்டில், 90களில் உருவான ஹவுதி (Houthi) எனப்படும் அமைப்பு ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளிப்பதனால், அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சீர்செய்வதற்காகவும் கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகவும், செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இணைந்து "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.