சந்திராயன் 3 இன் பயணம் தோல்வியில் முடிந்ததா : நம்பிக்கை இழந்த இஸ்ரோ

சந்திராயன் - 3 இன் பிரக்யான் மற்றும் விக்ரம் லாண்டர் களிடம் இருந்து எந்தவிதமான சமிக்ஞைகளும் கிடைக்காததால் இஸ்ரோ தனது நம்பிக்கையினை இழந்து வருகிறது.

சந்திராயன் - 3 தரையிறங்கிய இடத்தில் தற்போது சூரியன் மீண்டும் அஸ்தமிக்க ஆரம்பித்துள்ளதால் சந்திராயன் - 3 இன் இரண்டு லாண்டர்களும் மீண்டும் எழுந்திருக்கும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல அஸ்தமித்து வருவதாக கூறப்படுகிறது.

சூரிய அஸ்தமன காலத்தில் தரையிறக்கப்பட்ட சந்திராயன் 3 தனது பணிகளை ஆற்றிக்கொண்டு இருந்த வேளை, சூரிய ஒளி கிடைக்க ஆரம்பித்த காலத்தில் பிரக்யான் மற்றும் விக்ரம் லண்டர்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

சூரியனின் கதிர்களால் லாண்டர்களின் மின்கலங்கள் மின்னேற்றப்பட்டு ஏனைய ஆய்வுகளை தெளிவாக மேற்கொள்ளலாம் என இஸ்ரோ கணித்திருந்தது, அதன்படி முதலில் விடயங்கள் தெளிவாகவும் தெரிந்ததாக கூறப்படுகிறது.

சூரியன் உதயமாகி வாரங்கள் கடந்தநிலையில் இந்திய ரோவர் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நிலவில் சூரியன் மறைந்து மெல்ல மெல்ல அங்கே இருள் சூழ ஆரம்பித்துள்ளது, சூரியனின் வெப்பமயமாதல் இல்லாததால் அங்கு வெப்பநிலை வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது.

இதனால் லாண்டர்கள் தமது நீண்ட உறக்கத்தில் இருந்து எழும் என்ற நம்பிக்கை மங்கிவருகிறது, இருந்தாலும் இன்னும் ஒரு 14 நாட்கள் காத்திருந்து அடுத்த சூரிய உதயம் வரை லாண்டர்களை செயற்படுத்த முயற்சிப்போம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள்.

அடுத்த 14 நாட்களும் ரோவர் கடும் குளிரினைத் தாங்கி மீண்டும் எழ முயற்சிக்க வேண்டிய இக்கட்டில் உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றார்கள், இந்நிலை நம்பிக்கையை இழக்கும் விளிம்பில் தங்களை நிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"இந்த முயற்சியினால் வெற்றிகரமான பணிகளுக்காக காத்திருக்கிறோம், தவறினால் இந்தியாவின் சந்திர தூதராக எப்போதும் இந்த லாண்டர்கள் அங்கேயே இருக்கும்" என்று இஸ்ரோ தற்போது கூறியுள்ளது.