தாயக ஆக்கிரமிப்பும் - காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குகளும்

காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குகளை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பான இனப்பிரச்னை தொடர்பில் அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துழைக்க நாம்தயார்.ஆனால், இனி நீங்கள் பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ''இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்னைக்கான தீர்வு, பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்" என்கிறார் அதிபர் ரணில் விக்ரமசிங்க.

இதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகின்றார்.

பெப்ரவரி 4இற்குள் தீர்வு காண்போம் என்றும் கூறினார். இப்போதும் மீண்டும், மீண்டும் கூறுகின்றார்.

இலங்கையில் இன்று இருக்கும் பெரும்பான்மை கட்சிகளின் தலைவர்கள் மத்தியில், தேசிய இனப்பிரச்னை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்தவர் ரணில் விக்ரமசிங்க.

அதில் சந்தேகம் இல்லை. ஏனையோரைப் பற்றி சந்தேகங்கள் இருக்கின்றன.

எனினும், அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமனம் பெற்றபின் பலமுறை இந்தக் காலஅட்டவணைக்குள் இனப்பிரச்னைக்கு தீர்வு என பல முறை கூறிவிட்டார்.

தமிழ் மக்களுக்கும் இந்த வசனம் பரிச்சயமானதாகும்.

சர்வகட்சி மாநாட்டை நடத்தி முதற்கட்டமாக 13 ஐ பற்றி பேசிய போது அதுவரை ஒளிந்திருந்த பிக்குகள் தெருவுக்கு வந்தார்கள்.

அத்துடன் அது நின்று போய் விட்டது. இன்று அரகலய போராட்டத்துக்குப் பிறகு, கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு, சர்வதேச சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்பட்ட பிறகு, அதிபர் ரணில் விக்ரமசிங்க, இனப்பிரச்னை தீர்வு பற்றி, தமிழ்க் கட்சிகளை அழைத்து பேச முன் சிங்களக் கட்சிகளை அழைத்து நாட்டின் உண்மை நிலை பற்றிப் பேச வேண்டும்.

சிங்கள மக்களை விளித்து நேரடியாகக்கூற வேண்டும். இனிமேலும் இதைத் தள்ளிப் போட முடியாது என எடுத்துக் கூறவேண்டும்.

சர்வதேச சமூகமும் அதற்குச் சாதகமாக நடந்துகொள்ளும்.

“இந்த வருட இறுதிக்குள் இனப் பிரச்னை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்" என்றெல்லாம் கூறுவதற்கு முன், வடக்கு, கிழக்கில் காணி பறிபோகின்றது.

தொல்பொருள் திணைக்களம், தொல்லை திணைக்களம் ஆகிவிட்டது.

சிவனைத் தூக்கிக் கடாசி விட்டு, பிக்குகள், இராணுவத் துணையுடன், புத்தனை பிரதிஷ்டை செய்கின்றார்கள்.

காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குகளை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

அதற்கு இதுதான் வேளை. இல்லாவிட்டால் கடும் பதற்ற நிலைமை வடக்கு - கிழக்கில் விரைவில் உருவாகும் என்பதே நிதர்சனம்.