ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் வெற்றி - இல்லாதொழிக்கப்பட்ட காவல்துறை


கட்டுக்கு அடங்காமல் செல்லும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக ஈரான் அரசு, 'காஸ்த் எர்ஷாத்' என்ற கலாசார காவல்துறை பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அட்டர்னி ஜெனரல் முகமது ஜபார் மோன்டசாரி, சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நேற்று(4) அளித்த ஊடக சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஓர் அறப் போராட்டம் என்ன செய்யும் என்பதற்கு விளக்கமாகி நிற்கின்றனர் ஈரானின் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.

ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஈரான் அரசு 'காஸ்த் எர்ஷாத்' என்ற கலாசார காவலர் பிரிவை இல்லாது செய்வதாக அறிவித்துள்ளது.

மத மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் முகமது, "கலாசார காவலர்கள் ஒன்றும் நீதித்துறையையும் விட உயர்ந்தவர்கள் அல்ல.அதனால் அந்தப் பிரிவை இரத்து செய்துள்ளோம்'' என்றார்.

பெண்களின் ஆடை விடயத்தை கண்காணிக்கும் இந்தப் படைப்பிரிவு 2006ஆம் ஆண்டு அதிபர் மகமூத் அகமதுநிஜாத் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தக் குழுவின் முக்கிய வேலையே பெண்கள் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களின்படி ஆடை அணிகிறார்களா? குறிப்பாக ஹிஜாப் அணிகிறார்களா என்பதைக் கண்காணிப்பதே.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு காவல்துறை பொது இடங்களில் பரிசோதித்து வந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை காவல்துறை, மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல்துறை காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவற்ற நிலைக்குச் சென்றார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி மாஷா அமினி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. fifa உலகக் கோப்பை போட்டியில் விளையாட கட்டார் சென்ற ஈரான் அணியினர் தங்கள் நாட்டில் ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவாக தேசிய கீதம் பாடுவதை புறக்கணித்தனர்.

இந்நிலையில் தான் ஹிஜாப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்டு வருவதாக அட்டர்னி ஜெனரல் நேற்று(4) தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இந்த சட்டத்திருத்தம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்பது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கடந்த புதன் கிழமையன்று ஆய்வுக் குழு ஒன்று நாடாளுமன்ற கலாசார குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளது என தெரிவித்திருந்தார்.

ஒன்றிரண்டு வாரங்களில் அதன் முடிவு தெரியவரும் என்றும் இந்தச் சூழலில் கலாசார காவல் பிரிவை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.