ஜேர்மனியில் கனமழை... பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

தெற்கு ஜேர்மனியில் கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

தெற்கு ஜேர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து பெருவெள்ளம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல மீட்புப்படையினர் போராடிவருகிறார்கள்.

பவேரியாவில், அணை ஒன்று உடைந்ததால், Ebenhausen-Werk பகுதியில் வாழ்ந்துவந்த சுமார் 800 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், Baden-Wuerttemberg பகுதியில் ஒரு வீட்டின் தரைத்தளத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு ஆணும் பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

அதேபோல, பவேரியாவிலுள்ள Schrobenhausen என்னுமிடத்தில் 43 வயது பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயது தன்னார்வலர் ஒருவரின் வாகனம் கவிழ்ந்ததில் அவர் பலியானதோடு, 23 வயது தன்னார்வலர் ஒருவரைக் காணவில்லை என அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.