திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி: வெளியான காரணம்


யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொர்தன் யுனி (NORTHERN UNI)இன் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு மேடை ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சி சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த உங்களை மனவருத்தத்தில் ஆட்படுத்துவதை எண்ணி SLIIT நொர்தன் யுனி (NorthernUni) ஆகிய நாம் மிகவும் கவலை கொள்கிறோம்.

யாழ்ப்பாணத்தின் சீரற்ற காலநிலை காரணமாகவும், தமிழ்நாட்டில் நிலவும் பதற்றகரமான காலநிலை காரணமாகவும், புயல் எச்சரிக்கையால் விமானபயணங்கள் தடைப்பட்டு இருப்பதாலும் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற பகுதிகளில் கடும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு இருப்பதனாலும் அங்கிருந்து மக்கள் வரமுடியாத சூழல் உருவாகி உள்ளது.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி (Hariharan Live in concert) மற்றும் ஸ்டார் நைட்(Star Night) நிகழ்ச்சி பிற்போடப்படுகிறது என்பதனை மக்களாகிய உங்களுக்கு மனவருத்தத்துடன் அறிய தருகிறோம்.

எம் நிகழ்ச்சி வெறுமனே இசை நிகழ்ச்சியாக மட்டுமே இருந்திருந்தால் இந் நிகழ்ச்சியை நிகழ்த்தி இருக்க முடியும். ஆனால் இது நட்சத்திர கொண்டாட்டமும் என்பதினால் எதிர்பார்த்தளவில் எதிர்பாத்த மாதிரி கண்ணுக்கு விருந்தளிக்க முடியாமல் போனதை இட்டு மனம் வருந்துகின்றோம்.

இயற்கையின் சீரற்ற தன்மையினால் இலவசமாக வழங்கும் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி (Hariharan Live in concert )மற்றும் ஸ்டார் நைட் (Star Night) நிகழ்ச்சியானது எதிர்வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடாத்தப்படும் என்பதனை மகிழ்வுடன் அறிய தருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.