கனடாவில் குடியேற உள்ளோருக்கு பிரதமரின் மகிழ்ச்சியான அறிவிப்பு

முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளதாக கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்த நடைமுறைகள் சரியான கிரமமான அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட எட்டு குடியேறிகள் கனேடிய எல்லைப் பகுதி நதியொன்றில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த மரணங்கள் பெரும் கவலையளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். குடிவரவு முறைமையில் நம்பகத்தன்மையை பேண வேண்டிய கடப்பாடு கனடாவிற்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமான முறைகளில் எல்லைகளை கடப்பதற்கு எத்தனிக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கிரமமான முறையில் பெருந்தொகை குடியேறிகளுக்கு கனடாவில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.