யாழில் திரைப்பட பாணியில் நடந்த துப்பாக்கி சூடு! நடுவீதியில் தடம்புரண்ட டிப்பர்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை பளையிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் புத்தூர் பகுதியில் வைத்து காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டது.

வாகனம் மறிக்கப்பட்ட போது காவல்துறையினரை உதாசீனம் செய்த சாரதி வேகமாக சென்று புத்தூர் பிரதான வீதி ஊடாக சிறுப்பிட்டி, ஆவரங்கால் உள்ளிட்ட பல பாதையில் ஊடாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்தி வந்த காவல்துறையினர் பாடசாலை மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்த புத்தூர் பிரதான வீதியை அடுத்து மக்கள் நடமாட்டம் குறைந்த வீரவாணி எனும் பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

டிப்பர் ரக வாகனத்தின் டீசல் மற்றும் டயர் மீது துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்ததில் சாரதி உட்பட இருவர் வாகனத்துடன் சேர்ந்து தடம் புரண்டனர்.

இவர்களை கடமையிலிருந்த காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு காவல்துறையினர் கைதுசெய்து அச்சுவேலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குறித்த டிப்பர் ரக வாகனம் காவல்துறையினர் துரத்தி சென்ற போது இடைவழியே மணலை பறித்தவாறு சென்றதுடன் மீதமிருந்த மணல் வாகனம் தடம் புரண்ட இடத்திலேயே கொட்டிக் கிடந்தது.

தடம் புரண்ட வாகனத்தை கனரக வாகனத்தில் உதவியுடன் தூக்கிய காவல்துறையினர் வீதியில் இருந்த மணலையும் அப்புறப்படுத்தினர்.

இதன்போது பளைப்பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பரக வாகனத்தின் உரிமையாளர் எனக் கருதப்படும் இளைஞர் ஒருவரையும் அவ்விடத்தில் வைத்து காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் கைதான மூவரும் அச்சுவேலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.