டீசல் கப்பலுக்கு 35 மில்லியன் டொலரை செலுத்தியது அரசாங்கம்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணி இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.

37,500 மெட்ரிக் டன் டீசல் உடனான குறித்த கப்பலின் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு  நேற்றிரவு 35.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இருப்பினும் இரண்டு நாள் தாமதம் காரணமாக டீசல் ஏற்றிச் செல்லும் கப்பலுக்கு $38,000 செலுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சு முன்னர் குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொண்டு அதனை சேமித்து வைக்கும் நடவடிக்கையை பொதுமக்கள் கைவிட வேண்டும் என்றும் எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.