மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கோட்டபாயவின் தந்திரோபாய காய்நகர்த்தல்! வெளியான பரபரப்பு தகவல்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்குமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் கோட்டாபய அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தாக கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியின் வதிவிடம் மற்றும் அலுவலகம் என்பன அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ளன.

அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்ச, கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை இரத்துச்செய்தார்.

நாட்டில் நடந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அதிபர் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவுக்கு செல்ல விசா கோரி விண்ணப்பத்திருந்தார்.

எனினும் அமெரிக்கா அவருக்கு விசா வழங்க மறுத்தது. இவ்வாறான நிலைமையில், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டால், அவருக்கு மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக தற்போது முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கடமையாற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.