யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் கோர விபத்து - நபர் பரிதாப பலி!


யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் காவல்தறை பிரிவிற்குட்பட்ட வரணிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நள்ளிரவு 12.10 மணியளவில் வரணி எருவன் பகுதியில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

வடமராட்சி அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் நோயாளர்காவு வண்டி மூலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அல்வாய் கிழக்கைச் சேர்ந்த 32 வயதுடைய சத்தியநாதன் சத்தியானந் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை குறித்த விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொரு காவல்துறை உத்தியோகத்தர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.