விடுதலைப்புலிகளை அழிக்க நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தம் முடிந்திராது - மொட்டு அறிவிப்பு



விடுதலைப்புலிகள் அமைப்பை அழிக்க எவராவது நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்க முடியாது என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானத்தை அப்போது எவரேனும் அடிப்படை உரிமைகள் மீறல் என்று நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது .

“நாட்டின் மொத்த சனத் தொகைக்கும், நீதிபதிகளின் எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன . 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11 ஆக காணப்பட்டது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் அந்த எண்ணிக்கை 17 ஆக அதிகரிக்கப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கையின் தாமத நிலை நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்து விடக் கூடாது. நீதிமன்ற நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தினால் பல வழக்குகளை துரிதமாக முடிக்க முடியும். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்களின் விடயதானங்கள் வரையறை செய்யப்பட வேண்டும்.

எனவே கொள்கை ரீதியில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது நாட்டுக்கு பொருத்தமற்றது. நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்கு விசாரணைகள் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதற்கு ஒரு தடையாக உள்ளன.

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு குறைந்தபட்சம் 4 ஆண்டு காலமேனும் செல்கிறது. வழக்கு விசாரணைகள் தாமதப்படும் போது பாதிக்கப்படும் தரப்பினர் ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் கடுமையாக விமர்சிப்பார்கள். நடைமுறையில் அவ்வாறான தன்மையே காணப்படுகிறது” என்றார்.