காதலன் முன்பாகவே காதலி வன்புணர்வு - காவல்துறை அதிகாரி அட்டூழியம்



சமனலவெவவை பார்வையிடுவதற்காக வந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரின் முன்பாகவே காதலியை வன்புணர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சமனலவெவவை பார்வையிடுவதற்காக குறித்த காதல் ஜோடி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளது. அங்கு ஓரிடத்தில் நின்றிருந்த காவல்துறை கான்ஸ்டபிள், மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கூறியுள்ளார். தான் காவல்துறை அதிகாரி என்றும் போதைப்பொருள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறி தனது காவல்துறை அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.

இருவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனக்கூறி, மோட்டார் சைக்கிளுடன் அவ்விளைஞனுக்கு கைவிலங்கு இட்டுள்ளார். அதன்பின்னர், காதலியை பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று முழு நிர்வாணமாக்கி, துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதன்பின்னர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் அந்த 18 வயதான யுவதியை நிர்வாணமாக படம்பிடிக்க முயற்சித்துள்ளார். எனினும், அதற்கு அந்த யுவதி இடமளிக்கவில்லை என விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில்,காவல்துறை அதிகாரியென தன்னை கூறிக்கொள்ளும் நபரொருவர்,  இளம் ஜோடிகளை இலக்குவைத்து கைவரிசையை காண்பித்து வருவதாக சமன​லவெல காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. ஸ்தலத்துக்கு விரைந்த அவர்கள் நிர்வாணமாக இருந்த யுவதியை மீட்டதுடன், கைவிலங்கு போடப்பட்டிருந்த இளைஞனையும் மீட்டு பலாங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காவல்துறை கான்ஸ்டபிள் என்பதும் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. சந்தேகநபரை ​பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.