ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை! ஏற்க மறுத்த தமிழ் தரப்புகள்: சுகாஷ் காட்டம்

அரச எடுபிடிகளான தமிழ் அரசியல் தலைமைகள் சிலர், நடிப்பதையும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று வாயளவில் கூறி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளகப் பொறிமுறைக்கு உடன்படுவதையும் தமிழ் மக்கள் இனியும் கண்டுபிடிக்கமாட்டார்களென்று அரச எடுபிடி தமிழ் தலைமைகள் கருதினால், அது அவர்களின் முட்டாள்தனமே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று கனேடிய பிரதமர் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இது தொடர்பில் க.சுகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமென்பதையும் 2010 முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

இதன்போது, தமிழ்த் தரப்புக்கள் அவற்றை மறுதலித்து, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசைக் காப்பாற்றும் வகையில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்லவென்றும் அது வெறும் யுத்தக் குற்றமென்றும் இனப்படுகொலைக்கு ஆதாரங்களில்லை என்றும் கூறி தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தது.

தற்சமயம் கனேடியப் பிரதமரே “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை” என்று கூறியுள்ளதால், எங்கே தமது காட்டிக்கொடுப்புக்களைத் தமிழ் மக்கள் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், அரச எடுபிடிகளான தமிழ் அரசியல் தலைமைகள் சிலர் நடிப்பதையும் இனப்படுகொலை என்று வாயளவில் கூறி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளகப் பொறிமுறைக்கு உடன்படுவதையும் வாக்குகளுக்காக முள்ளிவாய்க்காலுக்குச் சென்று விளக்கேற்றி வருவதையும் தமிழ் மக்கள் இனியும் கண்டுபிடிக்க மாட்டார்களென்று அரச எடுபிடித் தமிழ்த் தலைமைகள் கருதினால், அது அவர்களின் முட்டாள்தனமே.”என தெரிவித்துள்ளார்.