இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே ...!

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் பாதயாத்திரை ஒன்றை தற்போது ஆரம்பித்து நடத்தி வருகிறார். அதன் தொடக்க நிகழ்வு ராமேஸ்வரத்தில் இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது, தமிழக மீனவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள்…” என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டபோதும் அப்படி நடக்கவே இல்லை என சிங்களம் முழு பூசணிக்காயை சோற்றில் இதுநாள்வரை மூடி மறைத்து வந்துள்ளது. ஆனால் இதனை எத்தனை காலத்திற்கு தான் மறைக்க முடியும்.

1983 ஆம்ஆண்டு ஓகஸ்ட் 16 ஆம் திகதி இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்த இந்திராகாந்தி இந்திய நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று கூறினார்.

அவர் கூறி 40 ஆண்டுகளின் பின்னர் தற்போது இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ள உள் துறை அமைச்சர் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என தெரிவித்துள்ளமை சிங்களத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டியதை வெளிப்படுத்தியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.