காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் உரப்பையினுள் இருந்து பெருமளவு உடல்கள் மீட்பு

கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 30 பாலஸ்தீனர்களின் உடல்கள் உரப்பையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் படையினர் வெளியேறிய நிலையில் வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லாஹியாவில் உள்ள  பாடசாலை மைதானம் ஒன்றிலிருருந்து இந்த உடல்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 பாலஸ்தீனிய கைதிகள் கழகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆக்கிரமிப்பு இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட பாடசாலை ஒன்றில் 30 தியாகிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை" உறுதிப்படுத்தியது.

 "அவர்களின் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டிருந்தனர்.அதாவது, அவர்கள் கைது செய்யப்பட்டனர், இது ஆக்கிரமிப்பு. இராணுவம் அவர்களுக்கு எதிராக கள மரணதண்டனையை மேற்கொண்டது என்பதற்கு தெளிவான அறிகுறியாகும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விடுவிக்கப்பட்ட கைதிகளின் சாட்சியங்களின்" அடிப்படையில், காசாவில் மரணதண்டனைகள் அதிகரித்து வருவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

 இதேவேளை காசாவின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கி காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையில் 26,900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 65,949 பேர் காயமடைந்துள்ளனர்.

 பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச மதிப்பீடுகள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் காசா பகுதியில் பாலஸ்தீன எதிர்ப்புக் குழுக்களுடனான மோதலில் மேலும் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை அறிவித்தது.

அத்துடன் தெற்கு காசாவில் மேலும் இரண்டு வீரர்கள் பலத்த காயம் அடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

 இஸ்ரேலிய உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி, ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது.

ஒக்டோபர் 27 அன்று காசாவில் தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் உயிரிழப்பு 223 ஆக உள்ளது.

 எனினும், இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்களில் அவர்கள் சந்தித்த இழப்பு, இந்த எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாக இருப்பதாக பாலஸ்தீனிய கிளர்ச்சி குழுக்கள் தெரிவித்துள்ளன.