அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் கொலை

அமெரிக்காவின் இல்லினொயிஸ் மாநிலத்தில் ஆடவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை நண்பகலில் வீடு ஒன்றுக்குள் ஊடுருவிய அந்த ஆடவர் நடத்திய இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சம்பவம் இடம்பெற்ற ரொக்போர்ட் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 15 வயது சிறுமி, 63 வயது பெண், 49 வயது ஆடவர் மற்றும் 22 வயது இளைஞர்கள் ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர். 22 வயது ஆடவர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீடு ஒன்றின் மீதான ஊடுருவல் பிளோரன்ஸ் வீதியில் இடம்பெற்றபோதும் பல இடங்களில் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.