அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்ததாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலை மேலும் உயர்வடையும். அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் தீர்மானித்துக் கொள்வார்களாயின் அரசாங்கம் எதற்கு என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் உள்ள அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் எவரும் கட்டுப்பாட்டு விலைக்கு அமைய அரிசியை விற்பனை செய்வதில்லை. சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளை கட்டுப்பாட்டு விலைக்கு பெறுவது கடினமாகவே உள்ளது.
அரிசி உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் அரசாங்கத்துக்கு சார்பாகவும், பிறிதொரு தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராகவும் உள்ளனர்.
இவர்களின் போட்டித்தன்மையால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை சந்தையில் முறையாக அமுல்படுத்தாவிடின் எதிர்வரும் ஓரிரு வாரத்தில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலையேற்றத்துக்கு அமைவாகவே ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படுவதால் உணவு பொருட்களின் விலைகளை நிலையான முறையில் பேண முடியாத நிலை காணப்படுகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் அரசாங்கம் எதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உணவு மாபியாக்களை இல்லாதொழிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரத்தை கோரினார்.
நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள். ஆனால் அவர் உணவு பொருள் மாபியாக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு கையெழுத்தில் மாபியாக்களை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பேனைகளை வழங்குவார்கள் என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம் என்றார்.