முதன் முறையாக காசா மீது கொடூர தாக்குதல் : வீதிகளில் சிதறி கிடந்த உடல்கள்



காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியுள்ளமை மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் காசாவுக்கு எதிராக தரைவழி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை சுமார் 150 இற்கும் அதிகமான தடவைகள் காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இத் தாக்குதல்கள் பலஸ்தீனியர்களின் கூடார முகாம்கள், உயரமான கட்டிடங்கள் என அனைத்தையும் தரைமட்டமாக்கின.

அதுமட்டுமின்றி சுமார் 90 வீத மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன.

காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவதோடு, இஸ்ரேலின் இந்த தரைவழித் தாக்குதல்களை வன்மையாகவும் கண்டித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் இனப் படுகொலை செய்து வருவதா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.