யாழில் பெரும் மோசடி குற்றச்சாட்டில் கைதான போலி வைத்தியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி

வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்து மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளை பேணி அவர்களை மிரட்டி, பல இலட்ச ரூபாய்களை பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இளைஞனிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளில் பல பெண்களின் சமூக பிறழ்வான புகைப்படங்கள், காணொளிகள் உள்ளதாகவும் பொலிஸ் விசரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் தன்னை வைத்தியர் என அறிமுகப்படுத்தி , அதற்கான போலியான ஆவணங்களையும் தயாரித்து வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இளைஞனை நேற்றுமுன்தினம் யாழ்.நகர் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வேளை இளைஞன் 15 பவுன் நகையை அணிந்திருந்ததுடன், 5 இலட்ச ரூபாய் பணத்தினை செலவுக்கு என வைத்திருந்துள்ளார்.

அத்துடன் 05 அதிநவீன தொலைபேசிகள், பல வங்கி அட்டைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.

இவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல போலி உறுதி பத்திர முடிப்புக்கள், காணி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இளைஞன் தனித்து குறித்த மோசடிகளில் ஈடுபடவில்லை எனவும், இவருக்கு பின்னால் பெரும் கும்பல் ஒன்று மோசடிக்கு உதவி புரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

அதேவேளை இளைஞன் யார் யாருடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து,

தொடர்புடைய நபர்களை விசாரணை வலயத்திற்குள் எடுத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.