சகல கட்சிகளும் இணைந்தாலும் பெரும்பான்மை பெற முடியாது - ரணில்


பழைமை வாய்ந்த சிந்தனைகளுடன் செயல்படுவதால் மக்கள் ஆதரவை பெற்றுக் கொள்ளவோ, தேர்தலில் வெற்றி பெறுவதோ இன்றைய கால கட்டத்தில் சாத்தியம் இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அதிபரை சந்தித்து நேற்று(11) கலந்துரையாடியபோதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னரும் இதே கருத்தை அதிபர் குறிப்பிட்டிருந்த போது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் கூட 50 வீத வாக்குகளை கடந்து செல்ல முடியாது, எனவே எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவது என்பது சாத்தியப்படாது.

மேலும் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர்,  இதுவரையில் நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு தரப்புக்கும் 51% கடந்து மக்கள் ஆதரவை பெற முடியாமல் போனது.

எவ்வாறாயினும், அன்றிலிருந்து இன்றுவரை எந்த ஒரு தரப்புக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கவில்லை ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற்றே ஆட்சியை அமைக்க முடிந்தது” என்றார்.

அத்துடன், அதிகாரம் அல்லது செல்வாக்கு இன்று யாருக்கு உள்ளது என்பதை யாராலும் கணிக்க இயலாது.

ஐக்கிய மக்கள் சக்திக்கோ, மக்கள் விடுதலை முன்னணிக்கோ அல்லது பொதுஜனபெரமுனவுக்கோ 50 வீதத்தை கடந்த அதிகாரமோ மக்கள் செல்வாக்கோ இருக்கும் என கூற முடியாது. நாட்டின் உண்மையான நிலை இதுவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்தால் கூட தேர்தலில் ஐம்பது வீதத்தை கடந்து வாக்குகளை பெறுவது என்பது சாத்தியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, வழமை போல சிந்தித்து செயல்படுவதால் மக்கள் ஆதரவை பெற்றுக் கொள்வதோ, தேர்தலில் வெற்றி பெறுவதோ யாருக்கும் சாத்தியமில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.