12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..! தொழிலாளர் சட்ட திருத்தம் தொடர்பில் எச்சரிக்கை

 இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சாதாரண தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில் புரியும் இடங்களில் சேவையாற்றுவதற்காக தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமை, தேவையான நேரத்தில் அவர்களை வெளியேற்ற இருக்கும் உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத்தை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை உருவாக்கும் நிலைமையே இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்புரியும் தொழிற்சாலைகளின் பிரதானிகளினால், தொழிலாளர்களுடன் தனியான ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள கூடியவாறான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்களில் தொழிலாளர்கள் கட்டாயம் கையொப்பமிடவேண்டி ஏற்படும்.

அதில் கையொப்பமிட்டதன் பின்னர் சாதாரண தொழிலாளர் சட்டம் நடைமுறையில் இருக்காது. எனவே, அதனூடாக தொழிலாளர்களை அவர்களுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் தொழிற்சாலையிலிருந்து நீக்குவதற்கும் அவர்களுக்கு ஏற்றவாறு தொழில்புரியும் காலத்தை தீர்மானிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

குறிப்பாக, பல்வேறு போராட்டங்களின் பின்னரே தற்போது நடைமுறையில் இருக்கும் 8 மணிநேர பணியை பெற்றுக் கொண்டோம். அவ்வாறு இருக்கையில், தேவை ஏற்படும் பட்சத்தில் 12 மணிநேரம் சேவையாற்றுவதற்கான உரிமையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன. இந்த யோசனைகளினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.