யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு


யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக  இமானுவேல் ஆனோல்ட் தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்துக்கு சரணடைய சென்ற போது கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வரான இமானுவேல் ஆனோல்ட் இன்றைய தினமே நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


முதலாம் இணைப்பு

யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இன்று (17.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.