மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்களிப்பு  இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதனையடுத்து நடைபெற்ற வாக்கெண்ணும் பணி முடிவடைந்து 267 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனது வெற்றியுரையையும் ஆற்றுகிறார்.

தனது வெற்றி உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது,

முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. குடியரசுக் கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் எனது நன்றி. மக்கள் என்னை நம்பித்தான் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக, தனது மனைவிக்கு உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்துக்கொண்டார் டிரம்ப்.

மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துக் கொண்டார்.

இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. இதுவரை யாரும் காணாத ஆட்சியை அளிக்கப்போகிறேன். அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்சினைகளைத் தீர்ப்பேன்.