அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகளின் விநியோக நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கைகள் இன்றையதினம் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தவிர, ஏனைய சபைகளுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டுகளின் விநியோக நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
 
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள 225 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டு விநியோகம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
 
இதேவேளை, தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
அதேநேரம் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

சித்திரை புத்தாண்டுக்கு முன்பே தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்திருந்தோம்.

பாதீட்டு திட்டம் மீதான விவாதம் இடம்பெறுவதனால் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.

இதன்படி, மார்ச் மாதம் 21ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதியை அறிவித்தது.

அதற்கமைய தேர்தல் மே மாதம் நடத்தப்படவுள்ளது.

எனவே, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு அமைய, உரிய முறையில் தேர்தல்கள் ஆணைக்குழு திகதியைத் தீர்மானித்திருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும்.

தொடர்ந்தும் தேர்தலை நடத்திக் கொண்டிருப்பதற்கு நேரத்தைச் செலவிட முடியாது.

எனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிக்கு அமைய, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பாரிய வேலைத்திட்டங்களைச் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெவ்வேறு நிபந்தனைகள் காரணமாக எம்மால் பணியாற்ற முடியாமல் உள்ளது.

8 இலட்சம் குடும்பங்களுக்கு மானிய விலையில் நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.  எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு அதனையும் தடுத்துள்ளதாக ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.