பொலன்னறுவை வெலிகந்தையில் பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடையது என சந்தேகிக்கப்படும் சித்திரவதை முகாம்; ஒன்றை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, இந்த இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிகப்படுகின்றது.
இதேநேரம் இந்த சித்திரவதை முகாமில் ஏராளமானோர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்ட பல நபர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தித்துள்ளதாகவும் சிரேஸ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த முகாம் 2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களிடமும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். முகாம் இருந்த காலத்தில், சித்திரவதைக்கு உள்ளானவர்கள் வலியால் அலறும் சத்தங்களை தொடர்ந்து கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தம் தாங்க முடியாததாகவும், முகாமில் இருந்து அவ்வப்போது குப்பை நாற்றம் வீசுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
போர் முடிந்த பிறகு, விவசாயிகள் இந்த முகாமை சுற்றியுள்ள நிலத்தை நெல் பயிர் செய்கைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் முகாம் உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் முகாம் இன்னும் பாதுகாப்பாக இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு அந்த இடத்தை கண்காணித்து வருகிறது.
இந்த முகாமில் தங்கியிருந்த பிள்ளையானின் தரப்புடன் தொடர்புடைய பலரையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.